சனிக்கிழமை காலை பத்து மணி. தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் செழியனின் தாத்தா. தான் ஃப்யுன்-ஆக பணியாற்றிய பள்ளியில் ஓய்வு பெற்றதில் இருந்து அவர் அவ்வீட்டில் சம்பளம் வாங்காத வேலைக்காரன் போல இருந்தார். காய்கறி வாங்கக் கடைக்குச் செல்வது, வீட்டுத்தோட்டத்தைப் பராமரிப்பது, சலவை செய்யத் துணி கொடுப்பது- எடுப்பது என ஆல்-ன்-ஆல் அழகுராஜாவாகத் திகழ்ந்தார். தன் மகனுக்காகத் தானே செய்கின்றோம் என இயல்பாகவே காணப்பட்டாலும், அவரது உள்மனதில் தன் மகன் தன்னை சரியாக பார்த்துக்கொள்ளவில்லையே எனும் எண்ணம் இருந்தது.
” என்னங்க, நேத்து சாயந்தரம் நான் ஆபீஸ்ல இருந்து வர்ற அப்போ நம்ம வீட்டு ஓனர் என்கிட்ட பேசினார். கேட் மேல ஏறி பையன் விளையாண்டுட்டு இருந்தானாமா, அப்போ சுவர்ல கேட் மோதினா சுவரும் உடையும், கேட்-ம் ‘ஸஃபாயில்’ ஆகிடும், பார்த்துகோங்க-னு சொன்னாரு. கருவேப்பிலை கொத்து மாதிரி ஒரு பையனை வச்சு இருக்கோம். அவன் சுதந்திரமாத் திரிய முடியாம என்ன ஒரு வீடு. சீக்கிரம் ‘என்ச்நீர்’ கிட்ட சொல்லி ‘கன்ஸ்டிரக்சன் வொர்க்’-ஐ முடிக்கச் சொல்லணும் – செழியனின் அம்மா அவனுடைய அப்பாவிடம் கூறினாள்.
இதைக்கேட்ட செழியனின் தந்தை அருள், ‘என்ச்நீர்’ கொடுத்து இருந்த கட்டிட மாதிரி பொம்மை-ஐ எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான். அதைப்பற்றி தன் மனைவியிடம் விவாதம் செய்து கொண்டு இருக்கையில், அவனருகே ஓடி வந்த செழியன் அம்மாதிரிக் கட்டிட பொம்மை-ஐப் பார்த்தான். ஆறு வயதே ஆகும் செழியன் மிகவும் புத்திசாலி. அம்மாதிரிக் கட்டிட பொம்மை-ஐப் பற்றி அறிந்து கொள்வதில், குழந்தைக்கே உரிய ஒரு ஆர்வம் அவனது கண்களில் தெரிந்தது.
மிகவும் சுலபமான கேள்விகளை அவனது தந்தையிடம் கேட்க தொடங்கினான்.
” அப்பா அது என்ன, இது ஏன் இங்க இருக்கு ? “
“ஓ! அதுவா … என் குட்டி பையன் குளிக்க, குடிக்க தண்ணீர் வேண்டாமா ? அதுக்குத்தான் – ‘வாட்டர் டாங்க்’ 🙂 “
” என்ன ‘ கலர் ‘ லப்பா இருக்கும் ? “…
…
தொடர்ந்தது உரையாடல். அப்போது அம்மதிரியில் ஒரு ஓரமாக அமையப்பெற்றிருந்த சிறு குடில் போன்ற அமைப்பைக் காட்டி செழியன் கேட்டான்…
” அப்பா இது என்ன – சிறுசா இருக்கு ? “
ஒரு சிறு அமைதி நிலவியது … அப்பாவிடம் பதில் இல்லை…
அருள் பதில் கூறாமல், தன் மனைவியை நோக்கினான். ..
“ஓ! அதுவாடா கண்ணா! உன் வயசான தாத்தா, படியெல்லாம் ஏறி இவ்ளோ பெரிய வீட்டுக்குள்ள வர முடியாது இல்ல …அதான் உன் தாத்தா இருக்க! ” …
…
“எவ்வளவோ மருமகள்கள் தன் மாமனாரை முதியோர் இல்லத்தில் இருக்க வைக்க, இவள் தான் கட்டும் வீட்டில் தன் அப்பாவிற்கு ஒரு சிறு குடிலாவது போட ஒத்துகிறாளே! அது வரை மகிழ்ச்சி..” நினைத்தான் அருள்.
…
மீண்டும் அமைதி .. செழியன் எழுந்து வெளியே சென்றான்.
…
” தாத்தா, தாத்தா.. உன்னால படி ஏறி வர முடியாதா ? அதான் உனக்கு தனியா ஒரு சின்ன வீடா ? ” ..
..
கண்ணில் வந்த நீரை தன் பேரனிடம் மறைத்து, ” ஆமாடா தங்கம்.. ! சரி வா நாம மிட்டாய் வாங்க போலாம் …. “..
நேரம் கடந்தது .. மதியம் மணி ஒன்று….
…
அருள் அன்றைய தின செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டு இருந்தான். அவனருகே செழியன் விளையாண்டு கொண்டு இருந்தான்…
“என்னங்க, சாப்பிட வாங்க… செழி குட்டி நீயும் வா ..” கூறிக்கொண்டே அவர்களருகே வந்தாள் செழியனின் தாய் .
..
” செழி குட்டி .. என்ன பண்ணுற ? ” அருகே அமர்ந்து பார்த்தாள்…
” வீடு கட்டி விளையாடுறேன் மா .. இங்க பார்த்தாயா, நான் பெரியவன் ஆகி கட்ட போற வீட்டில் கூட உனக்கும் அப்பாக்கும் ஒரு சின்ன வீடு தனியா வச்சு இருக்கேன் ..”
…
…
அமைதி .. மயான அமைதி .. ஆனால் செழியனின் தாய் மனதில் ஒரு புயல் .. அருளின் கண்களில் குழப்பம்… பதில் பேசாமல் விறு விறு என எழுந்து சென்றாள் செழியனின் தாய் …தொலைபேசியின் அருகில்..
….
” ‘ஹலோ என்ச்நீர் சார் ‘ .. வணக்கம் … நான் மஞ்சு பேசுறேன் .. எங்க வீட்டு ‘கன்ஷ்டிரக்சன் வொர்க்-இல’ ஒரு மாற்றம் இருக்கு. அந்த சின்ன வீடு வேண்டாம் … இதைப்பத்தி பேசணும்.. வீட்டுக்கு வர முடியுமா ? …. ”
…
தன் மகனைத் தாவி அனைத்துக்கொண்டான் அருள் ….
வெளியே அமர்ந்து இதைக்கவனித்துக் கொண்டிருந்த செழியனின் தாத்தா அவரது கண்ணீரை துடைக்கும் வேளையில், மஞ்சுவின் கை அவரது பாதம் தொடுவதை அவர் உணராமலில்லை…. 🙂
____________________________________________________________________________________________
சுய கருத்து இல்லாமல் மனிதன் இல்லை …. உங்களது கருத்துக்களைத் தயவு கூர்ந்து பதிக்கவும்..இப்பதிப்பு உங்களைக் கவர்ந்ததா…உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்…
இப்பதிப்பு உங்களைக் கவர வில்லையா ..அப்போதும் கட்டாயம் உங்களது கருத்துக்களைப் பதியுங்கள்..
சிறுகதைகள் இல் பதிவிடப்பட்டது
குறிச்சொற்கள்: arul, அப்பா, அருள், சின்ன வீடு, சிறுகதை, சிறுகதைகள், செழியன், தமிழ், தமிழ் சிறுகதைகள், தாத்தா, chezhiyan, chinna veedu, sirukathai, tamil, thaaththa